மூதாட்டி ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்திலுள்ள வெட்டுவானம் பகுதியில் விஜயா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சொந்தமான நிலம் அப்பகுதியில் அமைந்துள்ள ஆற்றின் கரையோரம் உள்ளதால் அங்கு செல்ல நடந்து சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து விஜயா ஆற்றங்கரை மீது நடந்து சென்று கொண்டிருக்கும் போது கால் தவறி உள்ளே விழுந்து விட்டார். இந்நிலையில் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் அவர் நீரில் அடித்து செல்லப்பட்டார். இதனையடுத்து வெகுநேரமாகியும் விஜயா வீட்டிற்கு திரும்பாததால் அக்கம்பக்கத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர்.
இதனைத் தொடர்ந்து அவரின் உடல் ஆற்றின் கரையில் கிடப்பதாக அங்கு சென்றவர் பார்த்து பள்ளிகொண்டா காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் விஜயாவின் உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.