மூத்த தம்பதிகள் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள சோழபுரத்தில் ஜானகிராமன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இவர்கள் வசிக்கும் வீட்டின் வளாகத்தில் மற்றொரு வீட்டு அமைந்துள்ளது. அந்த வீட்டில் இவர்களது உறவினர் சசிகலா என்பவர் வசித்து வருகின்றார். இதில் 2 குடும்பத்திற்கும் இடையே ஏற்கனவே சொத்து பிரச்சனை இருப்பதால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் ஜானகிராமன் வீட்டின் கழிவுநீர் கால்வாயை சசிகலா அடைந்துள்ளார். எனவே வீட்டின் கழிவு நீர் வெளியேறாமல் இருந்தது. இது தொடர்பாக ஜானகிராமன் அவரிடம் கேட்ட போது சசிகலா மூத்த தம்பதி இருவரையும் கேவலமாக பேசி திட்டியுள்ளார்.
இதனால் மனமுடைந்த ஜானகிராமனும் மாரியம்மாளும் வீட்டில் இருந்த பெட்ரோலை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்த அம்பத்தூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரின் உடல்களையும் கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர்களது வீட்டிற்கு சென்று சோதனை செய்ததில் கடிதம் ஒன்று சிக்கியது. அதில் எனது சாவுக்கு சசிகலா தான் காரணம் அவருக்கு சரியான தண்டனை வாங்கித் தரும்படி கேட்டுக்கொள்கிறேன் என ஜானகிராமன் கைப்பட எழுதப்பட்டிருந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சசிகலாவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.