அமெரிக்காவில் வெறிச்சோடி காணப்பட்ட உயிரியல் பூங்கா ஒன்றில் 2 பென்குயின்கள் சுதந்திரமாக சுற்றிப்பார்த்த வீடியோ ஓன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
கொரோனா வைரஸ் சர்வதேச அளவில் 150க்கும் மேற்பட்ட நாடுகளில் வேகமாக பரவி 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கொன்று குவித்துள்ளது. மேலும், 2 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கொடிய கொரோனா வல்லரசு நாடான அமெரிக்காவையும் விட்டுவைக்கவில்லை. அந்நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 105 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 6, 500 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்நாடு முழுவதும் பொதுமக்கள் கூட்டமாக கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இரவு விடுதிகள், ஹோட்டல்கள், பூங்காக்கள், வணிகவளாகங்கள், தியேட்டர்கள் என அனைத்து பொழுதுபோக்கு தளங்களும் மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்நாட்டின் சிகாகோ மாகாணத்தில் இருக்கும் ஒரு உயிரியல் பூங்காவும் கொரோனா வைரஸ் காரணமாக மூடப்பட்டதால் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் அந்த பூங்காவில் வேலை பார்த்துவந்த சிலர் பூங்காவில் உள்ள 2 பென்குயின் பறவைகளை அதன் கூண்டுகளில் இருந்து திறந்து விட்டுள்ளனர்.
பின்னர் கூண்டுகளை விட்டு வெளியே வந்த அந்த 2 பென்குயின்களும் சேர்ந்து பூங்காவின் ஒவ்வொரு பகுதியாக சுற்றிப்பார்த்து ரசித்துக்கொண்டே வந்தது. மனிதர்கள் நடமாட்டம் இல்லாததால் அந்த 2 பென்குவின்களும் பூங்காவின் வரவேற்பு பகுதி, மீன்கள் உள்ளிட்ட உயிரினங்கள் இருக்கும் பகுதி என ஒவொன்றாக அனைத்து பகுதிகளிலும் சுற்றித்திரிந்த வண்ணம் உள்ளன.
பென்குயின்கள் சாதாரணமாக இயல்பாக சுற்றிப்பார்த்து கொண்டே வரும் காட்சியை அந்த பூங்காவில் வேலை செய்துவரும் நபர் ஒருவர் தனது மொபைல் போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.
oh my god, the chicago aquarium closed due to coronavirus, so they let the penguins run around and check out the other exhibits. (staff was present.) pic.twitter.com/YGa8CugymE
— Evan McMurry (@evanmcmurry) March 16, 2020