தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவையாறு அருகே ராயப்பேட்டை பிரதான சாலையில் விரிவாக்க பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக நேற்று பொக்லைன் இயந்திரம் மூலமாக அங்கு சாலை விரிவாக்க பணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது வீர மாங்குடியில் இருந்து தஞ்சை நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை சிறுபுலியுரை சேர்ந்த பிரபாகரன் என்பவர் ஒட்டி வந்துள்ளார். இந்நிலையில் ராயப்பேட்டை பிரதான சாலையில் பேருந்து சென்ற போது பணியில் ஈடுபட்டிருந்த பொக்லைன் எந்திரம் மீது எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பேருந்தின் முன் பகுதி முற்றிலும் சேதம் அடைந்தது. மேலும் டிரைவர் பிரபாகரன், நடத்துனர் ஜீவானந்தம், பஸ்ஸில் பயணம் செய்த ஈச்சங்குடியை சேர்ந்த ராஜேஸ்வரி, மாரியம்மாள், மாரிமுத்து, கோமதி, செம்மங்குடி மட்டத்தைச் சேர்ந்த பிரதசா, ஸ்ரீதேவி, சோமேஸ்வரத்தை சேர்ந்த ரமேஷ், சிவகுமார், சேனாதிபதியை சேர்ந்த செந்தாமரை, சங்கவி, கலியமூர்த்தி, சம்பூரணம், லட்சுமி, திருப்பழனத்தை சேர்ந்த வர்ஷா, ரேவதி, சுதா, மகிழன், வெங்கடாசலம், மனோஜ் பட்டியைச் சேர்ந்த அபிநயா, கண்டியூரை சேர்ந்த அமலா ஆகிய 23 பேரும் படுகாயம் அடைந்தனர். இவர்களை அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.