திருச்சி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு தரமான விதைகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் புதிய உயர் தொழில் நுட்பத்துடன் கூடிய ஒருங்கிணைந்த விதை சான்று மைய கட்டிடம் கட்டப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா நேற்று திருச்சியில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு அமைச்சர் கே.என் நேரு தலைமை தாங்கி அடிக்கல் நாட்டியுள்ளார்.
மேலும் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன், வேளாண்மை துறை இணை இயக்குனர் முருகேசன் உட்பட பலர் இந்த விழாவில் கலந்து கொண்டனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது, உயர் தொழில்நுட்பதுடன் கூடிய ஒருங்கிணைந்த விதை சான்று மைய கட்டிடம் கட்டப்படவுள்ளது.
இதன் மதிப்பு 2 கோடியே 80 லட்சம் ரூபாய் ஆகும். சுமார் 7000 சதுர அடியில் உயர் தொழில்நுட்பத்தில் விதை பரிசோதனை நிலையம், விதை முளைப்பு திறன் அறை, குளிர்சாதன சேமிப்பு அறை, அலுவலகத்திற்கான அறை ஆகியவை அமைய உள்ளது. இந்த பணி வேளாண் வணிக வாரியத்தில் திருச்சி பொறியியல் பிரிவு வாயிலாக மேற்கொள்ளப்படுகிறது.