புதிய கல்வியாண்டு வகுப்புகளை ஏப்ரல் ஒன்றாம் தேதிக்கு முன்பாக தொடங்கக்கூடாது என சிபிஎஸ்சி அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து சிபிஎஸ்சி செயலாளர் அனுராக் திரிபாதி அனுப்பியுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது, சில பள்ளிகளில் புதிய கல்வி ஆண்டுக்கான வகுப்புகளை ஏற்கனவே தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்குறிப்பிட்ட கால வரையறைகுள்ளாக ஒட்டுமொத்த பாடங்களையும் நடத்தி விட வேண்டும் எனும் நோக்கத்தில் பள்ளிகள் எடுக்கும் இந்த நடவடிக்கைகள் மனச்சோர்வு மற்றும் அதிக சுமை போன்ற பாதிப்புகளை மாணவர்கள் சந்திக்க நேரிடும்.
மேலும் நன்னெறி, கல்வி, சுகாதாரம், வாழ்க்கை திறன் மற்றும் உடற்கல்வி, பணித்திறன் மேம்பாட்டு கல்வி, சமூக சேவை போன்ற பாடம் சாராத நடவடிக்கைகளில் மாணவர்கள் ஈடுபடாத நிலையில் அதற்கு போதிய கால அவகாசம் கிடைக்காத நிலை உருவாகிறது. அதனால் வகுப்புகளை முன்கூட்டியே தொடங்குவதை பள்ளி முதல்வர்கள் தவிர்க்க வேண்டும். மேலும் ஏப்ரல் ஒன்றாம் தேதி தொடங்கி மார்ச் 31 இல் நிறைவு செய்ய வேண்டும் என்ற நடைமுறையை அனைத்து பள்ளிகளும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.