சிறந்த அரசியல் தலைவர் கலைஞரா ? எம்ஜிஆரா ? என்பது குறித்து சட்டப்பேரவை கூட்டத் தொடரில் காரசார விவாதம் நடைபெற்றது.
தமிழக சட்ட பேரவை கூட்டத் தொடரில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து இன்று நடைபெற்ற சட்ட பேரவை கூட்டத் தொடரில் சுகாதார மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய திமுக உறுப்பினர் சரவணன், உங்கள் தலைவர் எம்ஜிஆர்க்கு தலைவர் எங்கள் தலைவர் கலைஞர் தான் என்றும், எனவே உங்களுக்கும் எங்களுக்கும் ஒரே தலைவர் தான் அவர் கலைஞர் மட்டும் தான் என்றும் கூறி தொடர்ந்து உரையாற்றி கொண்டிருந்தார்.

இந்நிலையில் இது குறித்து பேசிய அமைச்சர் தங்கமணி, எம்ஜிஆருக்கு தலைவர் கருணாநிதி அல்ல என்றும், எம்ஜிஆர் தன்னிகரற்ற கட்சியின் பெருந்தலைவர் என்றும் தெரிவித்த அவர், எம்ஜிஆர் சுட்டிக் காட்டியதால் தான் கருணாநிதி முதலமைச்சர் பதவிக்கு வந்தார் என்றும், கட்சிப் பொறுப்பை ஏற்றார் என்றும் தெரிவித்தார். இதை எதிர்த்து பேசிய திமுக உறுப்பினர் எ.வ.வேலு, திமுகவில் எம்ஜிஆர் பொருளாளராக இருந்ததால் தான் கலைஞர் தலைவராக இருந்தார் என விளக்கம் கொடுத்தார்.
இதனை தொடர்ந்து மீண்டும் பேசிய அமைச்சர் தங்கமணி தேர்தலில் இனிமேல் கருணாநிதி மீது ஊழல் குற்றச்சாட்டு வராமல் பார்த்துக்கொள்கிறேன் என எம்ஜிஆர் கூறியதால் தான் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராக கலைஞரால் பதவி வகிக்க முடிந்தது என்றார். இவர்களை தொடர்ந்து பேசிய வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், எம்ஜிஆர் முதலமைச்சர் பதவிக்கு வந்தபின் அவர் உயிருடன் இருந்தவரை கருணாநிதியால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை என்று தெரிவிக்க, சபாநாயகர் தலையீட்டு இத்துடன் விவாதம் போதும் அமருங்கள் என்று கூறி விவாதத்தை முடித்து வைத்தார்.