திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வலங்கைமான் அருகே விருப்பாச்சிபுரம் ஊராட்சி கிராமத்தில் பாரதிபுரம் தெரு அமைந்துள்ளது. இங்கு கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பாக ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய அலுவலக பயன்பாட்டிற்காக வட்டார வளர்ச்சி சேவை மையம் கட்டபட்டுள்ளது. பொது பயன்பாட்டு கூடம், கழிவறை, அலுவலக அறைகள் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட இந்த கட்டிடம் இதுவரை திறக்கப்படாமலேயே இருக்கிறது.
இந்நிலையில் பராமரிப்பு இன்றி கிடக்கும் இந்த கட்டிடம் தற்போது சேதமடைந்து கொண்டிருக்கிறது. சுற்றுப்புற பகுதிகளில் கால்நடைகள் சுற்றி திரியும் மைதானமாக மாறி உள்ளது. அதனால் ஆறாண்டுகளாக திறக்கப்படாமல் இருக்கும் வட்டார ஊராட்சி சேவை மைய கட்டிடத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.