இன்று மதியம் 1.30_க்குள் கர்நாடக முதலவர் குமாரசாமி அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென்று மாநில ஆளுநர் வஜூபாய் வாலா கெடு விதித்துள்ளார்.
கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சிகளை சேர்ந்த 16 MLA_க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். அதே போல ஆளும் அரசுக்கு ஆதரவளித்து வந்த சுயேச்சை MLA_க்களான நாகேஷ், சங்கர் ஆகியோரும் தங்களின் ஆதரவை திரும்ப பெற்றுக் கொண்டதால் ஆளும் கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்தது.இதையடுத்து கர்நாடகாவில் கடந்த இரண்டு வாரங்களாக அரசியல் குழப்பம் ஏற்பட்டுக்கொண்டு இருக்கின்றது.

பரபரப்பான சூழலில் நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் பங்கேற்க எதிர்க்கட்சியான பாஜகவை சேர்ந்த 105 MLA_க்களும் சட்டசபைக்கு வந்தனர்.ஆனால் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளத்தை சேந்த அதிருப்தி MLA_க்கள் 20 பேர் சட்டசபைக்கு வரவில்லை. இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பு நேற்று நடைபெறாமல் போனது. இதையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த சபாநாயகர் காலம் தாழ்த்தாமல் உடனடியாக நடத்த வேண்டுமென்று பாஜகவினர் கர்நாடக கவர்னர் வஜூபாய் வாலாவை சந்தித்து புகார் அளித்தனர்.
இதை தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகர் ரமேஷ்குமாருக்கு கவர்னர் வஜூபாய் வாலா கடிதம் மூலம் வலியுறுத்தினார். ஆனால் நேற்று மாலை 6 மணிக்கே கர்நாடக சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று மதியம் 1.30 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி பெரும்பான்மையை நிரூபித்து காட்ட வேண்டும் என்று கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமிக்கு கவர்னர் வஜூபாய் வாலா கெடு விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் கர்நாடக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.