கர்நாடகாவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கெடு விதித்த அம்மாநில ஆளுநர் உத்தரவை எதிர்த்து முதலவர் குமாரசாமி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
கர்நாடக மாநில அரசியல் குழப்பத்திற்கு தீர்வு காணும் வகையில் கர்நாடக சட்டசபையில் ஆளும் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென்று அம்மாநில கவர்னர் வஜூபாய் வாலா முதல்வர் குமாரசாமிக்கு 2 முறை கெடு விதித்தும் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடக்கவில்லை. இதனால் வருகின்ற 22-ஆம் தேதி ( திங்கட்கிழமை ) நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதம் தொடரும் என்று அம்மாநில முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநில சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் இரண்டாம் நாள் விவாதம் நேற்று நடைபெற்றது. நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தின் மீதான முழு விவாதம் நடைபெற்ற பிறகே வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென்று ஆளும் கட்சியினர் தெரிவித்தனர். இதனால் கர்நாடக சட்டப்பேரவையை திங்கட்கிழமை காலை 11 மணிக்கு சபாநாயகர் ரமேஷ்குமார் ஒத்தி வைத்தார்.
இதற்கிடையே ஆளுநர் விதித்துள்ள நம்பிக்கை வாக்கெடுப்பு கெடுவை எதிர்த்து முதல்வர் குமாரசாமி நேற்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், சட்டசபையில் நம்பிக்கை தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடந்து வரும் நிலையில், அதன் மீதான ஓட்டெடுப்பு நடத்துவது குறித்து கவர்னர் உத்தரவு எதையும் பிறப்பிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.