நீட் தேர்வு தொடர்பாக வெற்று வாக்குறுதிகளை அளிக்கவேண்டாம் என அரசியல் கட்சிகளுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழக மாணவர்கள் அகில இந்திய போட்டித் தேர்வுகளில் பங்கேற்பதற்கான அனைத்து பயிற்சி வகுப்புகளையும் நடத்த வேண்டும் , மாணவ மாணவிகளின் தற்கொலைகளை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட உத்தரவுகளை சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்திருந்தது.2017 ஆம் ஆண்டு நீட் தேர்வில் தோல்வி அடைந்த மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டதையடுத்து தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை வழக்கறிஞர் சூரியபிரகாசம் தாக்கல் செய்தார்.

இந்நிலையில் தொடர்ந்து மாணவர் தற்கொலை அதிகரித்து வந்த பட்சத்தில் கடந்த மாதம் இந்த வழக்கானது விசாரணைக்கு வந்தது. இதில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு தமிழக அரசு வழங்க வேண்டும் என்று வழக்கறிஞர் சூரியபிரகாஷ் கோரிக்கை வைத்தார். இதுதொடர்பாக தமிழக அரசு ஜூலை 4ஆம்தேதி விளக்கம் அளிக்க வேண்டும் என்று தீர்ப்பை ஒத்தி வைத்த நிலையில்,இன்று நீதிபதி கிருபாகரன் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அதில், இழப்பீடு மற்றும் நீட் பயிற்சி வகுப்பு தொடர்பான விவரங்களை அளிக்க 2 வாரம் அவகாசம் தமிழக அரசு சார்பில் கேட்கப்பட்டதால் வழக்கை மீண்டும் நீதிமன்றம் ஒத்திவைத்தது. நீட் தேர்வை பொறுத்தவரையில் தீர்க்கமான முடிவுகள் எடுக்கபடாத பட்சத்தில் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்போம் என்ற வெற்று வாக்குறுதிகளை தமிழக அரசியல் கட்சிகள் அளிக்க வேண்டாம் என்று உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.