தமிழ் கனவு திட்டம் நிகழ்ச்சி…. அதிகாரி அளித்த பாராட்டு சான்றிதழ்,பரிசுகள்… மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு…!!

தமிழக அரசு அறிவுறுத்தலின் படி, தமிழ் பண்பாட்டின் பெருமையை இளைய தலைமுறைக்கு குறிப்பாக கல்லூரி மாணவர்களுக்கு உணர்த்தும் வகையில் மாவட்டந்தோறும் மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சிறுவங்கூர் அரசு மருத்துவக்கல்லூரியில் மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. தமிழ் இணைய கல்வி கழகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடந்த இந்நிகழ்ச்சியில் அம்மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்க, மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் உஷா, மாவட்ட வருவாய் அலுவலர் பவித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் சிறப்பு அழைப்பாளர்களாக எழுத்தாளர் பாவா செல்லதுரை பங்கேற்று, கவிதைகளின் வழியே தமிழ் மனம் என்ற தலைப்பில் மற்றும் எழுத்தாளர் ஆண்டாள் பிரியதர்ஷினி ஒரு நூற்றாண்டு வேர்களைத் தேடி என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள். இதனை தொடர்ந்து தமிழ் பெருமிதம் எனும் நூலை வாசித்து சிறந்த கருத்துக்களை வழங்கிய மாணவ, மாணவிகளுக்கு பெருமித செல்வன், பெருமித செல்வி, எனவும், எழுத்தாளர்கள் பேசிய பேச்சுக்கள் குறித்து சிறந்த கேள்விகளை எழுப்பிய மாணவ, மாணவிகளுக்கு கேள்வி நாயகன், கேள்வி நாயகி எனவும் கவுரவப்படுத்தி அவர்களுக்கு பாராட்டு சான்றிதழும், பரிசுகளையும் கலெக்டர் வழங்கினார். இதில் தமிழ் கனவு திட்ட மண்டல ஒருங்கிணைப்பாளர், மருத்துவ கல்லூரி மருத்துவ கண்காணிப்பாளர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மாவட்ட அலுவலர், மாவட்டத் தாட்கோ மேலாளர், தாசில்தார், மருத்துவர், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.