கத்தியை காட்டி மிரட்டி பணம் மற்றும் நகை பறித்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சோழபுரம் பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகின்றார். இவர் அப்பகுதியில் ஹோட்டல் நடத்தி வருகின்றார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது வீட்டிற்குள் நுழைந்த 2 மர்ம நபர்கள் அவருடைய மகள் பிரியங்காவை கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த தங்க சங்கிலியையும், ரூபாய் 49 ஆயிரம் ரொக்க பணத்தையும் பறித்து விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இது குறித்து பிரியங்கா சோழபுரம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விஜயகுமார் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிப் பதிவுகளை வைத்து தீவிர விசாரணை நடத்தி வந்துள்ளனர். அதில் ராமானுஜபுரத்தைச் சேர்ந்த கவியரசன் மற்றும் நடையழகன் ஆகிய 2 பேர் தான் விஜயகுமாரின் வீட்டிற்குள் புகுந்து பணம் மற்றும் சங்கிலியை பறித்து சென்றனர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் அவர்கள் 2 பேரையும் கைது செய்ததோடு பணம் மற்றும் நகையை பறிமுதல் செய்து உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளனர்.