டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் அருண் ஜெட்லி உடலுக்கு ஜேபி நட்டா, அமித்ஷாவை தொடர்ந்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி வயது (66) கடந்த 9-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் நேற்று அருண் ஜெட்லி சிகிச்சை பலனின்றி காலமானார். இதையடுத்து இவரது உடல் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்ட அருண் ஜெட்லி உடலுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், மத்திய அமைச்சர்களான அமித்ஷா, ஜெய்சங்கர், ராம் விலாஸ் பாஸ்வான், ஹர்ஷ்வர்தன், ராஜ்நாத் சிங் உட்பட பாஜக மூத்த தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர்.

மேலும் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோரும் அருண் ஜெட்லி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். வெளிநாடு பயணம் சென்றுள்ள பிரதமர் மோடி ட்விட்டரில் , நான் ஒரு மதிப்புமிக்க நண்பரை இழந்துவிட்டேன் என்று இரங்கல் தெரிவித்ததுடன் தொலைபேசியில் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து,அருண் ஜெட்லியை புகழ்ந்து கூறியிருந்தார். கிரிக்கெட் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு அருண் ஜெட்லியின் உடல் கொண்டு வரப்பட்டு தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் கட்சி தலைமையகத்தில் அருண்ஜெட்லிக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதன்பின் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதை தொடர்ந்து நிகாம் போத் காட் பகுதியில் இறுதி சடங்குகள் நடைபெற உள்ளன.