
காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, ஈரோடு கிழக்கு தொகுதியில் இந்திய கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளரை ஆதரித்து காங்கிரஸ் தலைவர்கள் பிரச்சாரம் செய்ய இருக்கிறோம். ஜனநாயக நாட்டில் தேர்தலில் போட்டியிடுவது என்பது அந்தந்த கட்சிகள் எடுக்கும் முடிவு தான். அதில் கருத்து சொல்ல விரும்பவில்லை. தமிழ்நாட்டு மக்கள் எங்களுக்கு வாக்களிக்க தயாராக உள்ளனர்.
எனவே ஈரோடு கிழக்கு தொகுதியில் பெருவாரியான வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் வெற்றி பெறுவார். தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த மண்ணை பாதுகாக்க கூடிய தலைவர்களாக ராகுல் காந்தியும், ஸ்டாலினும் உள்ளனர். எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடுகளும் இல்லை. காங்கிரஸ் கட்சியினர் மகிழ்ச்சியோடு திமுகவுடன் இணைந்து தேர்தல் பணியாற்றி வருகிறோம். பாஜக தலைவர் அண்ணாமலையை பொருத்தவரை கிழக்கே போ என்று கூறினால், அவர் அவர் மேற்கே போவார். இப்படித்தான் அவர் நடந்து கொள்வார்.
நடிகர் விஜய்யின் கட்சி கொள்கைகள் கோட்பாடுகள் சமூக நீதிப் பேசுவது என்று அனைத்தும் இந்தியா கூட்டணியுடன் ஒத்துப்போவதால் அவரை இந்தியா கூட்டணிக்கு அழைத்தோம். வேறு எதுவும் இல்லை. ஐஐடி இயக்குனரான காமகோடி மாணவர்களுக்கு எதை சொல்லிக் கொடுக்க வேண்டுமோ, அதை சொல்லிக் கொடுக்காமல் கோமியம் குடியுங்கள் என்று கூறுகிறார். அனைவரையும் முட்டாள் ஆக்குவது தான் பாஜக என்று தெரிவித்தார்.