இலங்கை இந்தியா இடையேயான பயணிகள் கப்பல் இயக்கம் குறித்த புதிய அறிவிப்பை இலங்கை விமான போக்குவரத்து துறை மந்திரி நிர்மல் சிரிபாலா விசில்வா நேற்று வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது “இந்தியாவின் காரைக்கால் பகுதியில் இருந்து இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள காங்கேசன்துறை பகுதிக்கு வருகின்ற ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கும். மேலும் கப்பலில் பயணிக்கும் ஒவ்வொரு பயணியும் தலா 100 கிலோ பொருட்கள் வரை எடுத்துச் செல்ல இயலும்.
அது மட்டுமல்லாமல் இந்த சேவையை தொடங்க இரு நாட்டைச் சேர்ந்த எந்த ஒரு பயணிகள் கப்பல் நிறுவனமும் முன் வரலாம்” என்று அவர் கூறியுள்ளார். மேலும் இது தொடர்பாக இலங்கை போக்குவரத்து அமைச்சகம் கூறியதாவது “இந்தியா இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்திற்கு ஏதுவாக காங்கேசன்துறை பகுதியில் ஒரு பயணிகள் கப்பல் தளத்தை இலங்கை கடற்படை கட்டிக் கொண்டு வருகின்றது. இதனால் இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு சுமார் 4 மணி நேரத்தில் கப்பல் மூலம் பயணிக்கலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.