தெலுங்கானாவில் முதல் நாள் விருது வாங்கி, 2-ஆவது நாள் லஞ்சம் வாங்கிய போலீஸ்காரர் கைது செய்யப்பட்டிருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் பல்லே திருப்பதி ரெட்டி. இவர் காவல் துறையில் சிறப்பாக அர்ப்பணிப்புடன் கடுமையாக பணி செய்தற்காக கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தினத்தன்று இவரது பணியைப் பாராட்டி சிறந்த காவலர் விருதை தெலுங்கானா அரசு வழங்கி கவுரவித்தது.

இந்நிலையில் விருது வாங்கிய அடுத்த நாளே ரமேஷ் என்பவரிடம் காவலர் ரெட்டி ரூ 17,000 லஞ்சமாக வாங்கிய போது ஊழல் தடுப்புப் பிரிவினரிடம் கையும் களவுமாக சிக்கியுள்ளார். காவலர் ரெட்டி, ரமேஷ் என்பவரிடம் கடந்த சில மாதங்களாகவே லஞ்சம் கேட்டுள்ளார் அதற்கு அவர் தர மறுத்துள்ளார். தரவில்லை என்றால் பொய் வழக்கில் உன்னை உள்ளே தள்ளி விடுவேன் என காவலர் ரெட்டி மிரட்டியுள்ளார்.

இதையடுத்து நடந்தவற்றை ஊழல் தடுப்பு பிரிவுக்கு ரமேஷ் கூறியுள்ளார். அதன்படி ரமேஷ், காவலர் ரெட்டியிடம் 17 ஆயிரத்தை கொடுத்துள்ளார். அப்போது அதை வாங்கி பின் பாக்கெட்டில் ரெட்டி வைக்கும் போது கையும் களவுமாக அதிகாரிகள் பிடித்தனர். முதல் நாள் விருது வாங்கி, இரண்டாவது நாள் லஞ்சம் வாங்கிய போலீஸ்காரர் கைது செய்யப்பட்டிருப்பது வியப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.