குடும்ப தகராறில் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் தீபாவளி அன்று துணிக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தின் போது மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர் சிவராஜ் என்பவர் உயிரிழந்தார். இவருக்கு அங்கையற்கண்ணி என்ற மனைவியும், 5 வயதில் ஒரு ஆண் குழந்தையும், ஒன்றரை வயதில் ஒரு ஆண் குழந்தையும் இருந்தது. அங்கையற்கண்ணி தனது கணவரின் இறப்பிற்கு பின்பும் தனது கணவர் வீட்டிலேயே வசித்து வந்தார்.
இந்நிலையில் சிவராஜின் மறைவிற்கு தமிழக அரசு சார்பாக அறிவிக்கப்பட்ட இழப்பீடு தொகையை பிரிப்பதில் அங்கையற்கண்ணிக்கும் அவரது கணவர் வீட்டினற்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் அங்கையற்கண்ணி மதுரை கீழக்குயில்குடி அருகே உள்ள தனது தாய் வீட்டிற்கு இரு குழந்தைகளுடன் சென்றுள்ளார். இந்நிலையில் கணவனின் இழப்பால் மனவேதனையில் இருந்த அங்கையற்கண்ணி இன்று காலை தூக்குப்போட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் அங்கயற்கண்ணியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.