மழையினால் வீடுகளை இழந்து தவித்த மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் நிவாரண பொருட்கள் வழங்க உத்தரவிட்டார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கடம்பத்தூர் பகுதியில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகின்றது. இதனால் இருளர் இன மக்கள் 5 பேரின் வீடுகளில் மழைநீர் புகுந்து இடிந்து விழுந்து. மேலும் அப்பகுதியில் உள்ள 25 க்கும் மேற்பட்ட அவர்களின் வீடுகளில் மழைநீர் புகுந்து மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இது குறித்து தகவலறிந்த திருவள்ளூர் தாசில்தார், ஊராட்சி மன்ற தலைவர், கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி ஒன்றிய பணி மேற்பார்வையாளர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று மழையால் சேதமடைந்த குடிசைகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் குடிசைகளை இழந்து பாதிக்கப்பட்ட இருளர் இன மக்கள் 25 பேரை மீட்டு பள்ளியில் தங்கவைத்து தேவையான உணவு, பாய், போர்வை, குடிநீர், மின்விளக்கு வசதி ஏற்படுத்தி கொடுத்துள்ளனர். மேலும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.