ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமை…. துப்பாக்கி தொழிற்சாலை மருத்துவமனை உதவியாளர் தற்கொலை….. சோகத்தில் குடும்பத்தினர்….!!

திருச்சி மாவட்டத்திலுள்ள திருவெறும்பூரில் மத்திய அரசின் துப்பாக்கி தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்குள்ள மருத்துவமனையில் ரவிச்சந்திரன் என்பவர் உதவியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ராஜலக்ஷ்மி என்ற மனைவியுள்ளார். இந்த தம்பதியினருக்கு சாய் வர்ஷன் என்ற மகன் இருக்கிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆன்லைன் சூதாட்டத்தில் ரவிச்சந்திரன் 7 லட்சம் ரூபாய் வரை இழந்ததாக தெரிகிறது. இதனால் ரவிச்சந்திரனின் தாய் தனது மகன் வாங்கிய 7 லட்சம் ரூபாய் கடன் தொகையை அடைத்தார்.

இந்நிலையில் மீண்டும் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு லட்சக்கணக்கில் பணத்தை இழந்த ரவிச்சந்திரன் நேற்று முன்தினம் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரவிச்சந்திரன் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.