சென்னையில் 22ம் தேதி சாலையோரம் வசிக்கும் மக்களை சமூக நல கூடங்களில் தங்க அனுமதிக்க உத்தரவு!

சீனாவில் இருந்து தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் வரும் ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் மட்டும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் வீட்டை விட்டு வெளியில் வருவதைத் தவிா்க்க வேண்டும் என பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளார். இதனையடுத்து தமிழகத்தில் நாளை மறுநாள் அனைத்து கடைகள், உணவகங்கள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னையில் வீடில்லாமல் 9,000 பேர் சாலையோரம் வசித்து வருகின்றனர் என வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். சுய ஊரடங்கை முன்னிட்டு, சாலையோரம் வசிக்கும் மக்களை சமூக நல கூடங்களில் தங்க அனுமதிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையடுத்து சாலையோரம் வசிக்கும் மக்களை நாளை மறுநாள் சமூக நல கூடங்களில் தங்க அனுமதிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு உணவும் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் பதில் அளித்த மாநகராட்சி வழக்கறிஞர் வீடில்லா மக்கள் சமூக நலக் கூடங்களில் தங்க வைக்கப்படுவார்கள் என கூறியுள்ளார்.