திருப்பூர் மாநகரில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. இதில் பள்ளி, கல்லூரி கோடை விடுமுறை விடப்பட்ட நிலையிலும் சாலையில் எப்போதும் வாகனங்கள் மிகுந்து காணப்படுகின்றன. குறிப்பாக திருப்பூர் மாநகராட்சி, புஷ்பா ரவுண்டானா, காங்கேயம் சாலை ஆகிய பகுதிகளிலுள்ள சிக்னலில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. அதோடு மாநகராட்சி சிக்னலால் திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள மேம்பாலம் வரை நீண்ட தூரம் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதற்கு வாகனங்கள் பெருகியதே காரணம் ஆகும்.
அதனை சரி செய்ய மாநகரில் முக்கிய பகுதிகளில் பாலங்கள் அமைப்பதை சிறந்த தீர்வாகும். இன்னும் ஒரு வார காலத்திற்குள் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதால் காலை மற்றும் மாலை வேளைகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. அதுபோல போக்குவரத்து நெரிசலால் அவ்வபோது ஆம்புலன்ஸ் வாகனங்கள் சிக்கி தவிக்கின்றன. மேலும் போக்குவரத்து காவல்துறையினரும் போக்குவரத்தை சீர் செய்ய முடியாமல் திணறுகின்றனர். ஆகவே போக்குவரத்து துறையினர் தகுந்த நடவடிக்கை எடுத்து மாநகரில் போக்குவரத்தை சீர் செய்ய வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.