நாகப்பட்டினம் மாவட்டத்தில் வருகிற 22-ஆம் தேதி 193 ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. இது குறித்து கலெக்டர் அருண் தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, நாகை மாவட்டத்தில் உள்ள 193 ஊராட்சிகளிலும் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டம் கிராம ஊராட்சியில் தண்ணீர் மற்றும் சுகாதார நெருக்கடியை தீர்க்க மாற்றத்தினை துரிதப்படுத்துதல், ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவீனம், கிராம ஊராட்சியின் கடந்த ஆண்டு தணிக்கை அறிக்கை, 2022 – 2023 -ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட பணிகள் சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்தல் பற்றி விவாதிக்கப்பட இருக்கிறது.
மேலும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகள் முன்னேற்றம், கிராம ஊராட்சிகளில் போதைப்பொருள் ஒழிப்பு, கிராம வளர்ச்சி திட்டம் மற்றும் குழந்தைகளுக்கான பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிரான நடவடிக்கை போன்றவை குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது. அதனால் கூட்டத்தில் பொதுமக்கள், கிராமத்தைச் சேர்ந்த அரசு அலுவலர்கள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் ஊராட்சி பேரிடர் மேலாண்மை குழு உறுப்பினர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.