ராமநாதபுரம் பரமக்குடி அருகே கார் மீது பைக் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
சாத்தான்குளத்தை சேர்ந்த உஸ்மான் என்பவர் தனது 2 மகள்களுடன் மதுரை விமான நிலையத்திலிருந்து, புறப்பட்டு ராமநாதபுரத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார். கார் பரமக்குடியை அடுத்துள்ள சோமநாதபுரம் நான்கு வழி சாலை சந்திப்பில் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த பைக் ஒன்று திடீரென குறுக்கிட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் உடனே பிரேக் பிடிக்க முடியாமல் பைக் மீது மோதிய அந்த கார், சாலை நடுவில் இருந்த தடுப்பு சுவரின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பைக்கை ஓட்டி வந்த பரமக்குடியைச் சேர்ந்த சங்கர், காரில் வந்த உஸ்மான் மற்றும் அவரது 2 மகள்களான ஹைநூல் அரசியா, தஸ்லிமா பானு ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த கார் ஓட்டுநர் பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.