மீன் பண்ணைக்கு சென்ற கூலித் தொழிலாளி சேற்றில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள மீஞ்சூர் பகுதியில் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது உறவினர் ஒருவர் இறால் பண்ணை அமைத்துள்ளார். கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருவதால் குமார் பண்ணையைப் பார்க்க சென்றுள்ளார். ஆனால் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அச்சம் அடைந்த உறவினர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் பண்ணை குட்டைகள் அருகே உள்ள கழிமுக பகுதியில் குமாரை தேடி பார்த்துள்ளனர்.
அப்போது குமார் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு சேற்றில் சிக்கி உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த காட்டூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.