ராமேஸ்வரத்தில் விசைப்படகு மீனவர்கள் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஐந்தாவது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்க வேண்டும். கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு விடுவிக்கப்படாத மற்றும் அரசுடமையாக்கப்பட்ட சுமார் 150-க்கும் மேற்பட்ட படகுகளுக்கு உரிய நிவாரண தொகை வழங்க வேண்டும்.

மத்திய அரசால் மீனுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். உள்ளிட்ட மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 24ஆம் தேதி முதல் ராமேஸ்வரத்தில் அனைத்து விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மத்திய மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாளை ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என மீனவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். வேலை நிறுத்த போராட்டத்தால் 900க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் சுமார் 25 ஆயிரம் கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டு தங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளதாகவும் மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.