தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. வருவாய் கோட்டாட்சியர் பழனிவேலு இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கி பேசியுள்ளார். இந்நிலையில் கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் கூறியதாவது, டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டும் விவசாய விரோத செயல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மணல் குவாரிகள் அமைக்க அனுமதி அளித்தால் ஆழ்குழாய், கிணறு தண்ணீர் உப்பாக மாறும் அவல நிலை ஏற்படும். வருகிற ஜூன் ஒன்றாம் தேதி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை திறக்க வேண்டும். அதேபோல் தூர் வாரும் பணிகளை முறைகேடுகள் இல்லாமல் முழுமையாக செய்ய வேண்டும்.
மேலும் 6 குளம் ஏரி போன்ற நீர் நிலைகளில் வண்டல் இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி அளிக்க வேண்டும். மது பாட்டில்களை விளைநிலங்களில் உடைத்து விட்டு செல்வதால் விவசாயிகள் உரம் போடுதல் போன்ற வேலைகள் செய்யும்போது உடைந்த பாட்டில்களால் பாதிப்பு ஏற்படுகிறது. அதனால் காலி மதுபாட்டிகளுக்கு விலை நிர்ணயம் செய்து அரசு அதனை திரும்ப பெற வேண்டும். அதனை தொடர்ந்து புதிய நெல் ரகங்களான கோ 56, கோ 57, ஏ எஸ் சி 21, ஏ டி டி 58 ஆகிய நெல் விதைகளை அனைத்து வேளாண் விரிவாக்க மையத்திலும் இருப்பு வைக்க வேண்டும். பூதலூர் ஆனந்த காவிரியில் தூர்வாரும் பணியை திடீரென நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த பணியை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். அதேபோல் கோனேரிராஜபுரத்தில் குடமுருட்டி ஆற்றில் இருந்து பிரியும் வாய்க்கால் துர்ந்து போய் இருக்கிறது அதனை தூர்வார வேண்டும் என விவசாயிகள் கூறியுள்ளனர்.