தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, வருகிற 30-ஆம் தேதி காலை 10 மணிக்கு தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தஞ்சை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்பங்கள் குறித்து திட்ட விளக்கம் அளிக்கப்பட உள்ளது. இந்நிலையில் கூட்டத்தில் கலந்து கொள்ளும் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் வேளாண்மை பொறியியல் துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், நீர் பாசனம், கூட்டுறவு, தோட்ட கலைத்துறை, மின்சாரம், கால்நடை போன்ற விவசாயம் தொடர்புடைய கருத்துக்களை கூற வேண்டும்.
மேலும் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவிக்க விரும்பும் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் தங்கள் பெயர், ஊர் மற்றும் வட்டாரத்தை வருகிற 30ஆம் தேதி காலை 9 மணி முதல் 10 மணி வரை கணினியில் பதிவு செய்து கொள்ள வேண்டும். அதேபோல் விவசாயிகள் அளிக்கும் கோரிக்கை மனுக்களை கணினியில் பதிவு செய்து ஒப்புதல் பெற வேண்டும். மேலும் விவசாயிகள் விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் விவசாயம் சார்ந்த கருத்துக்களை கோரிக்கைகளாக கூறி பயன்பெற வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.