கிராமத்திற்குள் யானை புகுந்ததால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே காட்டுப் பகுதி அமைந்துள்ளது. இங்கிருந்து வெளியேறிய யானை விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று யானையை காட்டுப்பகுதிக்குள் விரட்டினர். இந்த யானை காட்டு பகுதியிலிருந்து மீண்டும் வெளியேறி கொல்லப்பள்ளி கிராமத்திற்குள் நுழைந்து விவசாய நிலங்களையும் சேதப்படுத்தி பிரதான சாலையில் ஆக்ரோஷத்துடன் சுற்றித் திரிந்தது. இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் அலறியடித்து வீடுகளில் ஓடி ஒளிந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து அந்த காட்டு யானை கிராமத்தில் இருந்து வெளியேறி வயல் வெளிக்கு சென்றது. பின்னர் தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பட்டாசுகளை வெடித்து யானையை காட்டுப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு யானை காட்டுப்பகுதிக்குள் சென்றது. இதனை தொடர்ந்து அந்த கிராமங்களில் இருக்கும் மக்கள் பாதுகாப்பாக இருந்து கொள்ள வேண்டும் என வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.