தேர்தல் தோல்விக்கு பொறுப்பான நிர்வாகிகள் மீது அடுத்த 10 நாள்களுக்குள் நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
7 கட்டங்களாக நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது. இதில் பாரதிய ஜனதா மட்டும் 303 இடங்களில் வெற்றி பெற்று தனிபெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சியை தக்க வைத்தது. ஆனால் காங்கிரஸ் வெறும் 52 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. இதையடுத்து இந்த படுதோல்விக்கான காரணங்கள் குறித்து விவாதிப்பதற்காக கடந்த சனிக்கிழமை காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவாதித்தபோது கட்சித் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகுவதாக முன்வந்தார். ஆனால், காங்கிரஸ் செயற்குழு அவரின் முடிவை முற்றிலுமாக நிராகரித்துவிட்டது. மேலும், கட்சியை மறுசீரமைப்பதற்கான முழு அதிகாரத்தை, ராகுல் காந்திக்கு செயற்குழு வழங்கியது.

இந்நிலையில் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக எடுத்த முடிவை திரும்பப் பெற்றுவிட்டதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் தோல்விக்கு பொறுப்பான நிர்வாகிகளின் மீது அடுத்த 10 நாள்களுக்குள் நடவடிக்கை எடுப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.