பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த நகையை மர்ம நபர்கள் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்திலுள்ள பாகாயம் கே.சி சாமி நகரில் விஜயகுமார் – உமா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் உமா வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையத்தில் ஆலோசகராக பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் கணவன் – மனைவி இருவரும் காட்பாடியில் அமைந்துள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு மீண்டும் தங்களது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது சாமி நகர் அருகே சென்று கொண்டிருக்கும் போது இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்த 2 பேர் இவர்களை பின்தொடர்ந்தனர். இதனையடுத்து ஆள்நடமாட்டம் இல்லாத போது அவர்களில் ஒருவன் உமாவின் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் நகையை பறித்த தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த உமா கூச்சலிட்டு உள்ளார். இதில் உமாவின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்ப்பதற்குள் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து பாகாயம் காவல் நிலையத்தில் உமா புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.