அத்திவரதர் தரிசனத்தை மேலும் நீடிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அத்திவரதர் தரிசனம் ஜூலை 1_ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றது. 45 நாட்கள் நடைபெறும் இந்த தரிசனத்தை மேற்கொள்ள தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் உள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசித்து செல்கின்றனர். அத்திவரதர் தரிசனம் இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருப்பதால் கட்டுக்கடங்காத கூட்டம் இருந்து வருகின்றது.வருகின்ற 17-ஆம் தேதி முதல் அத்திவரதர் மீண்டும் குளத்தில் வைக்கப்பட இருக்கின்ற சூழலில் அத்திவரதர் தரிசனத்தை மேலும் 48 நாட்கள் நீட்டிக்க வேண்டுமென்று தமிழரசி என்ற மூதாட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று மனுதாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் , அத்திவரதரை கூட்ட நெரிசலால் முழுமையாக தரிசிக்க முடியவில்லை, முதியோர்கள் , பெரியவர்கள் என இன்னும் லட்சக்கணக்கான பக்தர்களும் தரிசனம் செய்ய எதுவாக அத்திவரதர் தரிசனத்தை மேலும் 48 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டுமென்று அந்த மனுவில் சொல்லப்பட்டுள்ளது.அதே போல , ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜர் என்பவர் மேலும் 10 நாட்களுக்கு அத்திவரதரை தரிசிக்க அனுமதிக்க வேண்டும் என்று புதிதாக ஒரு மனுவையும் தாக்கல் செய்தார்.

இந்த இரண்டு வழக்குகளும் நீதிபதி ஆதிகேசலு அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையில் தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் , முதலமைச்சர் மற்றும் அறநிலைத்துறை சார்பாக நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை மீறி அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க முடியாது என்று தெரிவித்தார். இதையடுத்து அத்திவரதர் தரிசனத்தை மேலும் நீட்டிக்க முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.