இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பூதலூர் பகுதியில் மகேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே ஊரைச் சேர்ந்த நண்பர் அரவிந்தன் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் மீன் ஏற்றிக்கொண்டு புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கந்தர்வகோட்டை சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது நிலைதடுமாறி இருவரும் இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்து விட்டனர்.
இதில் பலத்த காயமடைந்த இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக இருவரும் தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி மகேந்திரன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இந்த விபத்து குறித்து கந்தர்வகோட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.