பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி, நாம் ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடுகிறோம் கிளப் கிரிக்கெட்டில் அல்ல என்று கோபமாக கூறியுள்ளார்.
ஐ.பி.எல்லில் 7-ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலங்கர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடியது . இந்த போட்டி பெங்களூருவில் உள்ள சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து மும்பை அணி களமிறங்கி 20 ஓவர் முடிவில் 187 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரோஹித் சர்மா 48 (33) ரன்களும் சூரியகுமார் யாதவ் 38 (24) ரன்களும், ஹர்திக் பாண்டியா 32 (14) ரன்களும், யுவராஜ் சிங் 23 (12) ரன்களும், டிகாக் 23 ரன்களும் குவித்தனர். பெங்களூரு அணியில் அதிகபட்சமாக சாஹல் 3 விக்கெட்டுகளும், உமேஷ் யாதவ், முகமது சிராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதையடுத்து 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 181 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. பெங்களூரு அணியில் அதிகபட்சமாக டிவில்லியர்ஸ் 41 பந்துகளில் 70* ரன்கள் (6 சிக்ஸர், 4 பவுண்டரி) விளாசி ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். விராட் கோலி 32 பந்துகளில் 46 ரன்களும், பார்த்திவ் பட்டேல் 22 பந்துகளில் 31 ரன்களும் குவித்தனர். மும்பை அணியில் அதிகபட்சமாக பும்ரா 3 விக்கெட்டுகளும், மார்க்கண்டே 1 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இந்த போட்டியில் கடைசி ஓவரில் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட மலிங்கா கடைசி பந்தை நோ பாலாக வீசினார். இதனை நடுவர் ரவி கவனிக்கவில்லை.பின்னர் தான் டிவி ரீஃபிளேயில் “நோ பால்” என்று தெரியவந்தது. நடுவர்கள் சரியாக கவனித்திருந்தால் பெங்களூர் வெற்றி பெற்றிருக்கும். இது தற்போது சர்ச்சையாகியுள்ளது.
பின்னர் பேசிய பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி “இது போன்ற தவறுகள் தவிர்க்கப்பட வேண்டும். நாம் ஐ.பி.எல் தொடரில் விளையாடுகிறோம். கிளப் கிரிக்கெட்டில் இல்லை. நடுவர்கள் தங்கள் கண்களை விழிப்புடன் வைத்திருந்திருக்க வேண்டும். நடுவர்கள் சரியாக பார்த்து நோ பால் என்று அறிவிக்கப்பட்டிருந்தால் போட்டி வேறு விதமாக மாறியிருக்கும். ஒருசில ரன்களில் வெற்றி வாய்ப்பு இருக்கும் போது இப்படி நடந்தால் என்ன செய்வது என்று தெரியவில்லை. அதனால் நடுவர்கள் இன்னும் கவனமுடன் இருக்க வேண்டும்” என்று கோபமாகக் கூறினார்..