இலவச மின் இணைப்பு வழங்க லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்திலுள்ள கடத்தூர் பகுதியில் விவசாயியான முருகன் என்பவர் வசித்து வருகின்றார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இலவச மின் இணைப்பு பெற இவர் விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. எனவே இணைப்பை வழங்க கோரி மின்வாரிய அலுவலகத்தில் வணிக ஆய்வாளராக பணியாற்றும் வேடியப்பன் என்பவரை முருகன் அணுகி உள்ளார். இதனையடுத்து இணைப்பை வழங்க ரூ 25 ஆயிரம் வேடியப்பன் பணம் கேட்டுள்ளார். இதில் லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத முருகன் லஞ்ச ஒழிப்பு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் ரசாயன பவுடர் தடவிய ரூபாய் 12 ஆயிரத்தை முருகனிடம் கொடுத்து அதனை வேடியப்பனிடம் வழங்குமாறு தெரிவித்துள்ளனர். அதன்படி அவர் பணத்தை கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் வேடியப்பனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.