மின் கம்பத்தின் மீது வேன் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் மதன்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியை சேர்ந்த வெற்றி, ஜெயக்குமார், ஈஸ்வரன் ஆகிய 3 பேருடன் சேர்ந்து காஞ்சிபுரதில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வேலை முடிந்தவுடன் சரக்கு வேனில் 4 பேரும் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது வெற்றி வேனை ஓட்டியுள்ளார். இந்நிலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரத்தில் உள்ள மின்கம்பத்தில் பயங்கரமாக மோதி ஏரிக்கரை பகுதியில் கவிழ்ந்தது. இதில் 4 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.
இந்த விபத்தில் மதன்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த ஒரகடம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.மேலும் மதன் குமாரின் உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.