சவூதி அரேபியாவில் உள்ள இளவரசர் சுல்தான் விமானப்படைத் தளத்தின் மீது ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில், அமெரிக்காவின் அதிநவீன ‘E-3 சென்ட்ரி’ ரக விமானம் ஒன்று கடுமையாகச் சேதமடைந்துள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.

சுமார் 6 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 29 ட்ரோன்களைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், 10 அமெரிக்க வீரர்கள் காயமடைந்ததாகவும், அவர்களில் இருவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஒரு விமானத்தின் மதிப்பு சுமார் ₹4,100 கோடி முதல் ₹5,800 கோடி வரை இருக்கும் நிலையில், இந்தத் தாக்குதல் அமெரிக்காவிற்குப் பெரும் பொருளாதார மற்றும் பாதுகாப்பு இழப்பாகப் பார்க்கப்படுகிறது.

இதுமட்டுமின்றி, அமெரிக்காவின் MQ-9 ஆளில்லா விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதாகவும், F-16 போர் விமானம் ஒன்றைத் தாக்கியதாகவும் ஈரான் உரிமை கோரியுள்ளது. ‘பறக்கும் ரேடார் நிலையம்’ என்று அழைக்கப்படும் E-3 விமானங்கள் வான்வழி கண்காணிப்பு மற்றும் போர்க்காலக் கட்டுப்பாட்டுப் பணிகளில் மிக முக்கியமானவை.

பிப்ரவரி இறுதியில் தொடங்கிய இந்தப் போர் தற்போது இரண்டாவது மாதத்தை எட்டியுள்ள நிலையில், ஹூத்தி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களும் அதிகரித்து வருகின்றன. இந்தச் சம்பவங்கள் குறித்து அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை என்றாலும், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் முன்னெப்போதையும் விட அதிகரித்துள்ளது.