மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ‘ஐ-பேக்’ (I-PAC) நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை (ED) நேற்று அதிரடி சோதனை நடத்தியது. இந்தச் சோதனையின்போது முதலமைச்சர் மம்தா பானர்ஜி குறுக்கிட்டதாகக் கூறப்படும் புகார், தேசிய அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

கொல்கத்தாவின் சால்ட் லேக் பகுதியில் உள்ள ஐ-பேக் அலுவலகம் மற்றும் அதன் இயக்குநர் பிரதீக் ஜெயின் இல்லம் உட்பட மொத்தம் 10 இடங்களில் அதிகாரிகள் சோதனையிட்டனர். நிலக்கரி கடத்தல் ஊழல் தொடர்பான பணமோசடி வழக்கின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

சோதனை நடந்துகொண்டிருந்தபோதே, இயக்குநர் பிரதீக் ஜெயினின் இல்லத்திற்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி நேரில் சென்றார். அங்கிருந்து சில முக்கிய ஆவணங்கள் மற்றும் கணினி ஹார்ட் டிஸ்க்குகளை மம்தா பானர்ஜி தனது கையில் எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இதன் மூலம் விசாரணைக்கு இடையூறு விளைவித்ததோடு, முக்கிய ஆதாரங்களைச் சிதைத்துவிட்டதாகக் கூறி, அமலாக்கத்துறை கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.

 

இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள மம்தா பானர்ஜி, மத்திய அரசு மீது கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்: “எங்கள் கட்சியின் வேட்பாளர் பட்டியல் மற்றும் தேர்தல் வியூகங்களைத் திருடவே அமித் ஷா அமலாக்கத்துறையைப் பயன்படுத்துகிறார். அமித் ஷாவால் நாட்டைப் பாதுகாக்க முடியவில்லை, ஆனால் எதிர்க்கட்சிகளின் ஹார்ட் டிஸ்க்குகளைத் திருட முடிகிறது.”

இந்தச் சோதனையைக் கண்டித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் மாநிலம் தழுவிய போராட்டங்களில் ஈடுபட்டனர். டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் அலுவலகம் முன்பாகப் போராட்டத்தில் ஈடுபட்ட மஹுவா மொய்த்ரா, டெரெக் ஓ பிரையன் உள்ளிட்ட அக்கட்சியின் எம்.பி.க்களைப் போலீஸார் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று கைது செய்தனர்.

 

“மம்தா பானர்ஜி ஒரு பெண் சிங்கம், அவர் தனது கட்சியையும் மக்களையும் பாதுகாப்பார்” என்று கைது செய்யப்பட்டபோது மஹுவா மொய்த்ரா ஆவேசமாகத் தெரிவித்தார். தேர்தல் நேரத்தில் நடைபெற்றுள்ள இந்தச் சோதனை மேற்கு வங்க அரசியலில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.