இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டி20 போட்டி விறுவிறுப்பாகத் தொடங்கியது. முதலில் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களான சஞ்சூ சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடி 63 ரன்கள் சேர்த்தனர். ஆட்டம் விறுவிறுப்பாகச் சென்று கொண்டிருந்தபோது, ஒரு எதிர்பாராத விபத்தால் போட்டி சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.

சஞ்சூ சாம்சன் அடித்த பந்து நேராக களத்தில் இருந்த நடுவர் ரோகன் பண்டிட்டின் காலில் பலமாகத் தாக்கியதே இதற்குக் காரணம். ​ஒன்பதாவது ஓவரின் போது சஞ்சூ சாம்சன் நேராக அடித்த பந்தை, பந்துவீச்சாளர் பெரைரா பிடிக்க முயன்றார். ஆனால், அவர் கையில் படாமல் விலகிச் சென்ற பந்து, நடுவரின் முழங்காலில் பலமாக மோதியது. வலியால் துடித்த நடுவர் உடனடியாக மைதானத்திலேயே விழுந்தார்.

உடனே தென்னாப்பிரிக்க வீரர்கள் மற்றும் இந்திய அணியின் மருத்துவக் குழுவினர் ஓடி வந்து அவருக்கு முதலுதவி அளித்தனர். காலில் ஸ்ப்ரே அடிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட போது, இந்திய வீரர் ஹர்ஷித் ராணா நடுவருக்கு தண்ணீர் கொடுத்து உதவினார். சிறிது நேர சிகிச்சைக்குப் பிறகு போட்டி மீண்டும் தொடர்ந்தது.