ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் ஆகியோர் தனியறையில் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டிருந்த போது, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அனுமதியின்றி அந்த அறைக்குள் நுழைந்ததாகக் கூறப்படும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் துர்க்மெனிஸ்தானின் அஷ்காபாத்தில் நடைபெற்ற சர்வதேச அமைதி மற்றும் நம்பிக்கை மாநாடு நடந்து கொண்டிருந்தபோது நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஆர்டி இந்தியா (RT India) வெளியிட்டிருந்த வீடியோ மற்றும் பதிவுகளின் படி, ரஷ்ய அதிபர் புடினை சந்திக்க பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் சுமார் 40 நிமிடங்கள் காத்திருந்ததாக கூறப்படுகிறது. அதன்பின், பொறுமையை இழந்த அவர், புடின் மற்றும் எர்டோகன் இருவரும் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்த அறைக்குள் அனுமதியின்றி நுழைந்ததாக அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டது. வீடியோவில், அறைக்குள் நுழைந்த ஷெபாஸ் ஷெரீப் சுமார் 10 நிமிடங்கள் அங்கு இருந்துவிட்டு வெளியேறியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த காணொளி X  உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார். பலரும் இது ஒரு தூதரக மரியாதை மீறல் என விமர்சித்துள்ளனர். சர்ச்சை தீவிரமடைந்த நிலையில், ஆர்டி இந்தியா முன்பு வெளியிட்டிருந்த அந்த வீடியோ பதிவை தற்போது நீக்கியுள்ளது.
இதுகுறித்து ஆர்டி இந்தியா, “இந்த வீடியோ சம்பவத்தை தவறாக சித்தரிக்க வழிவகுக்கும் என்பதால், அதை நீக்கப்பட்டுள்ளது” என விளக்கம் அளித்துள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தான் ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளில், ஷெபாஸ் ஷெரீப் ரஷ்ய அதிபர் புடின் மற்றும் துருக்கி அதிபர் எர்டோகன் இருவரையும் சந்தித்து உரையாடியதாகவும், அந்த சந்திப்பில் இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய நலன்கள் தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புடினுடன் தனிப்பட்ட சந்திப்பு நடைபெறவில்லை என்ற தகவல்களையும் சில ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

மேலும் உயர்மட்ட சர்வதேச மாநாட்டில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் இந்த சம்பவம், தூதரக மரியாதை, ஊடகங்களின் பொறுப்பு மற்றும் சமூக ஊடகங்களில் தகவல்கள் எவ்வாறு பரவுகின்றன என்ற விவாதத்தை மீண்டும் முன்னிலைப்படுத்தியுள்ளது. வைரலான வீடியோ நீக்கப்பட்டிருந்தாலும், அதன் தாக்கம் அரசியல் மற்றும் சமூக ஊடகங்களில் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.