கர்நாடகாவில் கனமழை ஓய்ந்து உள்ளதை அடுத்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
கர்நாடகாவில் கடந்த 5 நாட்களாக கொட்டி தீர்த்த மழையால் கர்நாடகத்தின் வடக்கு மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறி நூற்றுக்கணக்கான கிராமங்களை தண்ணீர் தனித் தீவுகளாக மாற்றிவிட்டது. உத்தர கர்நாடகா, சிவமோகா , மிளகாவி , மைசூர் , மங்களூர் மற்றும் குடகு உள்ளிட்ட இடங்களில் வெள்ள நீர் இன்னும் விடியவில்லை. இதனிடையே கர்நாடக மாநிலம் கொப்பல் நகரத்தில் மீட்புப்பணியில் ஈடுபட்டு வந்த 5 வீரர்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பரபரப்பு காட்சி வெளியாகியது. உடனடியாக ஹெலிகாப்டர் மூலமாக ஒருவர் மீட்கப்பட்டுள்ளதாகவும் , மேலும் 4 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சிவமோகா-வில் உள்ள துங்கா நதியில் இருந்து பெருக்கெடுத்த வெள்ளத்தால் ராஜீவ் காந்தி நகர் , வித்யா நகர் உள்ளிட்ட இடங்களில் இடுப்பளவு தண்ணீர் தேங்கி நிற்கிறது.உணவு குடிநீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் கிடைக்காமல் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் தத்தளித்து வருகின்றனர். கர்நாடகாவில் மழை வெள்ளத்திற்கு இதுவரை 40 பேர் பலியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் மூழ்கி இருக்கும் கிராமங்களில் ஹெலிகாப்டர் மூலம் அத்தியாவசிய பொருட்கள் வினியோகிக்கப்பட்டு வருகிறது.