
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மூலைக்கரைப்பட்டியில் ஆரோக்கிய ரெமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் ஜவுளிக்கடை, பாத்திரக்கடை, நகை அடகு கடை நடத்தி வருகிறார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மர்ம நபர்கள் ஆரோக்கிய ரெமன் கடையில் இருந்த 275 போல் தங்க நகைகள், 3 லட்ச ரூபாய் பணம் ஆகியவற்றை திருடிவிட்டு தப்பி சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் ரெட்டார்குளத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர் திருமணமாகி ஹைதராபாத்தில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.
அவரை தனிப்படை போலீசார் கைது செய்து 100 பவுன் தங்க நகைகள், 11 லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இந்த நிலையில் ராமகிருஷ்ணனின் தாய் மீனாட்சி தனது மகன் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். போலீசார் அவரிடமும் விசாரணை நடத்தினர். இதனால் மன உளைச்சலில் இருந்த மீனாட்சி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.