ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 41 சுற்றுலா பயணிகள் சுற்றுலா பேருந்தில் தமிழ்நாட்டிற்கு வந்தனர். அந்த பேருந்து ரமேஷ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அவர்கள் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு செல்ல முடிவெடுத்தனர். இந்நிலையில் திருச்சி- சென்னை பைபாஸ் சாலையில் சிறுவாச்சூர் சர்வீஸ் ரோடு அருகே சென்று கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக ஓடி அந்த வழியாக வந்த கார் மீது மோதி கவிழ்ந்து விட்டது.
இந்த விபத்தில் கார் டிரைவர் கிறிஸ்டோபர், பிரின்ஸ், பேருந்து டிரைவர் ரமேஷ், சுற்றுலா பயணிகள் உட்பட 15 பேர் லேசான காயமும், 3 பேர் படுகாயமும் அடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த 18 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.