மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ரங்கயபள்ளி கிராமத்தில் கட்டிட தொழிலாளியான கிருஷ்ணா வசித்து வந்துள்ளார். இவர் செந்தில்குமார் என்பவருக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இந்நிலையில் வேலை முடிந்ததும் கை கால்களை கழுவிவிட்டு கட்டிடத்தில் உள்ள மின் மோட்டார் சுவிட்சை அணைக்க முயன்று உள்ளார். அப்போது அவரை மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு சுருண்டு கீழே விழுந்து விட்டார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிருஷ்ணாவின் உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.