திருநங்கைகளுக்கான முன்மாதிரி விருது பெறுவதற்கு வருகின்ற பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் நடப்பு ஆண்டிற்கான திருநங்கைகளுக்கான முன்மாதிரி விருதுக்கு திருநங்கைகளின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம். இந்த விருதுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு உதவி பெறாமல் தானாக சுயமாக வாழ்க்கையில் முன்னேறி இருக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் அவர்கள் ஐந்து திருநங்கைகளுக்கு வாழ்க்கையில் முன்னேற உதவியிருக்க வேண்டும்.

திருநங்கைகள் வாரியத்தில் உறுப்பினராக இருக்கக் கூடாது. விண்ணப்பதாரரின் சுயவிவரக் குறிப்பு, இரண்டு புகைப்படங்கள், சேவை குறித்த செயல்முறை விளக்கத்துடன் கூடிய புகைப்படம் மற்றும் சேவையை பாராட்டி பத்திரிக்கை செய்தி தொகுப்பு உள்ளிட்டவற்றை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். இந்த விருதுக்கான விண்ணப்ப விவரங்களை வருகின்ற பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் awards.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.