அமெரிக்காவின் கென்டக்கி மாநிலம் லெக்சிங்டனில் அதிர்ச்சியளிக்கும் விதமாங ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது 8 வயது சிறுவன் லியாம், தன்னுடைய தாயின் அமேசான் கணக்கில் இருந்து தற்செயலாக 70,000 லாலிபாப் மிட்டாய்களை ஆர்டர் செய்துள்ளார். இதன் மொத்த மதிப்பு ரூ.3,55,795 ($4,200) ஆகும்.

லியாம் என்ற சிறுவன், கரு ஆல்கஹால் ஸ்பெக்ட்ரம் கோளாறு (FASD) என்ற நரம்பியல் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவராவார். அவருக்கு நண்பர்களுக்கு விருந்து வைக்க வேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டதால்தான் இவ்வளவு மிட்டாய்களை பரிசாக ஆர்டர் செய்ததாக கூறப்படுகிறது. வழக்கமாக தனது தாயின் மொபைலில் மேற்பார்வையுடன் விளையாடும் லியாம், இந்த முறையே தவறுதலாக மிகப்பெரிய ஆர்டரை வைத்துள்ளார்.

இந்த ஆர்டரால் தாயார் ஹாலி லாஃபேவர்ஸ் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினார். வீட்டின் வாசலில் 30 ‘டம்-டம்’ லாலிபாப் பெட்டிகளை கண்டு ஆச்சரியமடைந்த அவர், உடனே அமேசானைத் தொடர்புகொண்டு தவறுதலாக ஆர்டர் வைக்கப்பட்டதாக விளக்கினார். அமேசான் நிறுவனம், டெலிவரியை நிராகரிக்கும்போது பணத்தை திருப்பி தருவதாக அறிவித்தது. இருப்பினும், 22 பெட்டிகள் ஏற்கனவே வந்து விட்டதாக ஹாலி தெரிவித்தார். டெலிவரி  ஓட்டுநர் வீட்டிற்கு வந்தபோது வீட்டில் இருந்தவர்களை அழைக்காமல் வீட்டு வாசலில் பாக்ஸ்களை வைத்து விட்டு சென்றதால் பாக்ஸ்கள் திரும்ப பெறப்படவில்லை என்று கூறப்படுகிறது

இந்நிலையில், ஹாலி லாஃபேவர்ஸ் சமூக வலைதளமான பேஸ்புக் மூலம் தனது சமூகத்தினரிடம் உதவிக்கோரினார். மேலும் தாயும் மகனும் பிறகு அந்த மிட்டாய்கள் சிலவற்றை தேவாலயங்கள், பள்ளிகள் உள்ளிட்ட உள்ளூர் நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கினர்.