தோனிக்கு ஜடேஜா சிறந்த உறுதுணையாக இருப்பார் என்று சின்ன தல ரெய்னா தெரிவித்துள்ளார்..

ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் கடந்த ஆண்டு மிக மோசமான சீசனில் இருந்தது. சென்னை அணி விளையாடிய 14 போட்டிகளில் 10ல் தோல்வியடைந்து புள்ளிகள் பட்டியலில் 9வது இடத்தில் சீசனை முடித்தது. கேப்டன் மாற்றம்  கடந்த முறை சிஎஸ்கேவின் ஆட்டத்தை பாதித்ததாக கூறப்பட்டது. கடந்த சீசனுக்கு முன்பே, தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகினார், அவருக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா நியமிக்கப்பட்டார்..

ஆனால் ஜடேஜாவின் கீழ் அந்த அணியால் சிறப்பாக செயல்பட முடியவில்லை. இதன் மூலம் கேப்டன் பதவியில் இருந்து விலகிய ஜட்டு மீண்டும் தோனியிடம் பொறுப்பை ஒப்படைத்தார்.. இந்த சூழலில் வரவுள்ள ஐபிஎல் சீசனில் ஜடேஜா மிகப்பெரிய பலமாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் தற்போது ஆஸிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பேட்டிங், பவுலிங் என அசத்தி வருகிறார். இந்நிலையில் இப்போது முன்னாள் சிஎஸ்கே ஜாம்பவான் சுரேஷ் ரெய்னா, வரவிருக்கும் சீசனில் ஜடேஜாவைப் பற்றி ஒரு பெரிய கணிப்பு செய்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்டில் ஜடேஜாவின் ஆட்டத்தை நாங்கள் பார்த்தோம் என்றும், காயத்தில் இருந்து மீண்டு பழைய ஃபார்முக்கு வரும் வீரர் சிஎஸ்கேக்கு உதவுவார் என்றும் அவர் கூறினார். ஜடேஜா பேட்டிங்கிலும் பந்து வீச்சிலும் சிறப்பாக செயல்படுகிறார் என்றும், தோனிக்கு ஜடேஜா சிறந்த உறுதுணையாக இருப்பார் என்றும் ரெய்னா கூறினார்..

இந்திய நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா காயத்திலிருந்து குணமடைந்து சர்வதேச கிரிக்கெட்டில் மீண்டும் களமிறங்கி அசத்தி வருகிறார். இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர்-கவாஸ்கர் டிராபியின் முதல் இரு போட்டிகளிலும் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்ட ஜடேஜா இந்திய அணியின் உந்து சக்தியாக உள்ளார்.. அடுத்து வரும் 2 டெஸ்ட் போட்டியிலும் ஜடேஜா இதே ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

2023 ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா மார்ச் 31ஆம் தேதி முதல் மே 21 ஆம் தேதி வரை இந்தியாவில் 12 மைதானங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதிப் போட்டி மே 28ஆம் தேதி நடைபெறுகிறது. மார்ச் 31 ஆம் தேதி முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் 4 முறை ஐபிஎல் சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகிறது..