கோவிட் பெருந்தொற்று காலத்தில் குடிமைப்பணித் தேர்வுகளை எழுத இயலாமல் போன தேர்வர்களுக்கு வயதுவரம்பினைத் தளர்த்திடக் கோரி மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க ஸ்டாலின் அவர்கள் மாண்புமிகு இந்திய பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கு இன்று (7.2.2023) எழுதியுள்ள கடிதத்தில் கோவிட் பெருந்தொற்று காலத்தில் குடிமைப் பணி தேர்வுகளை எழுத இயலாமல் போன தேர்வர்களுக்கு வயது வரம்பினை தளர்த்தும் ஒரு முறை நடவடிக்கையை மேற்கொள்ள கேட்டுக் கொண்டுள்ளார்.

அக்கடிதத்தில் குடிமைப் பணி தேர்வுகள் உட்பட, ஒன்றிய அரசால் நடத்தப்பட்ட பல்வேறு ஆட்சேர்ப்பு தேர்வுகளுக்கான வயது வரம்பை கோவிட் பெருந்தொற்று காலங்களில் தவறவிட்ட தேர்வர்கள், ஒரு முறை நடவடிக்கையாக தங்களின் வயது வரம்பை நீட்டிக்க வேண்டும் என்று கோரி வருவதை குறிப்பிட்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், அவர்களது கோரிக்கையை கனிவுடன் பரிசளிக்க கேட்டுக் கொண்டுள்ளதோடு அனைத்து தேர்வர்களுக்கும் வயது தளர்வுடன் கூடுதல் முயற்சிக்கான வாய்ப்புகளை வழங்கிட நாடாளுமன்ற நிலை குழு பரிந்துரைத்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் உச்ச நீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் இது போன்ற அறிவுரைகள் வழங்கி உள்ளதாக குறிப்பிட்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 150 க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்வர்களின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளதையும் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்றின் தாக்கங்களை கருத்தில் கொண்டு அரசு பணிகளுக்கான தேர்வுகளை எழுதுவோருக்கான வயது வரம்பை 2 ஆண்டுகள் தளர்த்தி அரசாணை வெளியிடப்பட்டதை சுட்டிக்காட்டி உள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், ஒன்றிய அரசும் ஒன்றிய பணியாளர் தேர்வாணையம் நடத்திய சேமக் காவல் படை தேர்வுகளில், அனைத்து பிரிவினருக்கும் ஒருமுறை நடவடிக்கையாக, 3 ஆண்டுகள் வயது வரம்பை தளர்த்தி ஆணையிட்டுள்ளதையும் சுட்டி காட்டியுள்ளார்.

தேர்வர்களுக்கு இத்தகைய ஒரு முறை தளர்வு வழங்குவதன் வாயிலாக, அரசுக்கு எவ்வித நிதி சுமை ஏற்படாது என்றும், இது குடிமை பணி சேவையில் சேர விரும்பும் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு ஒரு பெரிய வாய்ப்பை வழங்கிடும் என்றும் தெரிவித்துள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், கோவிட் பெருந்தொற்று பாதிப்பை கருத்தில் கொண்டு குடிமை பணி தேர்வர்களுக்கு கூடுதல் வாய்ப்பினை வழங்கிட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாண்புமிகு இந்திய பிரதமர் அவர்களை கேட்டுக் கொண்டுள்ளார்..