
தமிழகத்தில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவடைந்த நிலையில் தற்போது பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடைபெறுகிறது. கடந்த 28ஆம் தேதி பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கிய நிலையில் ஏப்ரல் 15ஆம் தேதியோடு தேர்வு நிறைவடைகிறது.
இந்நிலையில் நேற்று 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கில பொது தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு நாகை அருகே வெளிப்பாளையம் பகுதியில் நடைபெற்ற போது தனித்தேர்வர் ஒருவர் ஆள் மாறாட்டம் செய்துள்ளார். அதாவது சுகந்தி என்பவருக்கு பதிலாக அவருடைய மகள் செல்வாாம்பிகை தேர்வு எழுதியுள்ளார். நேற்று திடீரென பறக்கும் படை அதிகாரிகள் தேர்வு அறைக்கு சென்ற போது அங்கு செல்வாம்பிகை மீது சந்தேகம் ஏற்பட்டது.
அவரிடம் விசாரணை நடத்தியதில் முன்னுக்குப் பின் முரணாக பதில் சொன்னதால் சந்தேகம் வலுவடைந்தது. பின்னர் ஹால் டிக்கெட்டை வாங்கி சோதனை செய்தபோதுதான் உண்மை தெரிய வந்தது. இதேபோன்று தமிழ் தேர்வையும் தன்னுடைய அம்மாவுக்கு பதில் அவர்தான் எழுதியுள்ளார். மேலும் செல்வாம்பிகையை கைது செய்து அழைத்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.