திருவாரூர் மாவட்ட கலெக்டர் ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கட்டுப்பாட்டில் திருவாரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் ஆதிதிராவிடர் நலத் தொடக்க பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களுக்கான பணியிடங்கள் காலியாக இருக்கிறது. இந்த பணியிடங்களை பள்ளி மேலாண்மை குழு மூலமாகவும், முற்றிலும் தொகுப்பூதிய முறையில் தற்காலிகமாகவும் நிபந்தனையின் அடிப்படையிலும் நிரப்பப்பட உள்ளது.

இதில் இடைநிலை ஆசிரியருக்கு மாதம் ரூ.7,500 தொகுப்பூதியம் வழங்கப்படுகிறது. வரையறுக்கப்பட்ட கல்வி தகுதியுடன் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் தன்னார்வலராக இருப்பவர்களுக்கு இதில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. மேலும் வரையறுக்கப்பட்ட கல்வி தகுதிகளுடன் ஆசிரியர் தொகுதி தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் பட்டியல் இனத்தவர்களுக்கு  முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது பணி நியமனம் செய்யப்படும் தற்காலிக ஆசிரியர்கள் முறையான நியமனங்கள் பூர்த்தி செய்யும் வரை மட்டுமே பணியமத்தப்படுகின்றார்கள்.

அதனால் தேவைப்படுபவர்கள் ஆசிரியர் காலி பணியிடங்களை திருவாரூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் அலுவலகத்தினை தொடர்பு கொண்டு அந்த பணியிடங்களுக்கு மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் தனது எழுத்து மூலமாக விண்ணப்பத்தினை கல்வி தகுதி சான்று மற்றும் இதர ஆவணங்களுடன் நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் வருகிற 15-ம் தேதி மாலை 5:45 மணிக்குள் கிடைக்கும் விதமாக அனுப்ப வேண்டும் என அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.